14 இடங்களில் வெயில் சதம்; வெப்ப அலை வீச்சு துவக்கம்
14 இடங்களில் வெயில் சதம்; வெப்ப அலை வீச்சு துவக்கம்
UPDATED : ஏப் 09, 2024 04:42 AM
ADDED : ஏப் 09, 2024 04:41 AM

சென்னை : மாநிலம் முழுதும் வெயில் அதிகரித்துள்ள நிலையில், கடலோரம் அல்லாத மாவட்டங்களில், வெப்ப அலை வீச துவங்கியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் வாட்டுகிறது. ஈரோடு, கரூர் பரமத்தி, சேலம் உள்ளிட்ட இடங்களில் உச்சபட்சமாக, 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகிறது.
கடலோரம் அல்லாத மாவட்டங்களில், பகலில் வெப்ப அலை வீச்சும் துவங்கியுள்ளது.
கடந்த இரு நாட்களாக ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், வெப்ப அலை அதிகமாக தாக்கியது. இன்று முதல் 11ம் தேதி வரை, தென்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலம் முழுதும், 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோடு, சேலத்தில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவியது.
மீனம்பாக்கம், 38; கோவை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், 39; நாமக்கல், திருத்தணி, வேலுார், 40; தர்மபுரி, மதுரை, கரூர் பரமத்தி, திருப்பத்துார், திருச்சி, 41 டிகிரி செல்ஷியஸ்,
கொடைக்கானல், 22; ஊட்டி, 27; வால்பாறை, 30; துாத்துக்குடி, 34; நுங்கம்பாக்கம், காரைக்கால், நாகை, 35; கன்னியாகுமரி, புதுச்சேரி, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

