அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு: சசிகலா
அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு: சசிகலா
ADDED : ஜூலை 03, 2024 11:48 PM
சென்னை:சென்னையில் நேற்று, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தன் வீட்டில் ஆதரவாளர்களை சசிகலா சந்தித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு பணி 90 சதவீதம் நன்றாக உள்ளது. இன்னும் 10 நாளில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன்; விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இது, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். என்னுடன் வருவோரை, சுற்றுப்பயணத்தின்போது தெரிந்துகொள்வீர்கள்.
ஜெயலலிதா ஆட்சி செய்யும்போது, அவரை அனைத்துக் கட்சியினரும் கடுமையாக விமர்சித்தனர். தற்போது, அவரது படம் நிறைய பேருக்கு தேவைப்படுகிறது.
அவரது படத்தைக் காண்பித்து, ஓட்டு சேகரிக்கின்றனர். அவர் எவ்வளவு நல்லவர் என்பதையும், மக்களுக்கு அவருடன் உள்ள தொடர்பையும் தெரிந்து உபயோகப்படுத்துகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில், காவல் துறை சிறப்பாக செயல்பட்டது. அதே காவல் துறைதான் தற்போதும் உள்ளது. அதை இயக்குபவர் சரியாக இல்லை என்பதே நிலை. தி.மு.க., ஆட்சியில் ரேஷன் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நிலைமை ரொம்ப மோசம்.
இதைக் கேட்க, சட்டசபையில் சரியான ஆள் இல்லை. இவர்களுக்கு முடிவு கட்டுவதை, என் வேலையாக எடுத்துள்ளேன். அதன் துவக்கம்தான் என் பயணம். மக்களை சந்தித்து, அவர்களோடு உரையாடினால்தான், இதற்கு முடிவு வரும்.
சட்டசபையை அ.தி.மு.க., புறக்கணித்தது தவறு. தி.மு.க., அரசின் தவறுகளை தட்டி கேட்க, சட்டசபை உள்ளே உட்கார்ந்திருக்க வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசுடன் சண்டை போடுவதுதான் வேலையாக உள்ளது. தேர்தல் நேரத்தில் சண்டை போடலாம்; தேர்தல் முடிந்தபின், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
அ.தி.மு.க., பிரிந்து கிடப்பது தி.மு.க.,வுக்கு வசதியாகி விட்டது. இதற்கு 2026ல் நல்ல முடிவு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.