வேங்கைவயல் விவகாரத்தில் பயிற்சி காவலரிடம் விசாரணை
வேங்கைவயல் விவகாரத்தில் பயிற்சி காவலரிடம் விசாரணை
ADDED : மே 24, 2024 05:42 AM

புதுக்கோட்டை : வெள்ளனூர் அருகே வேங்கைவயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளிராஜா சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு ஆஜரானார்.
புதுக்கோட்டை மாவட்டம், வௌளனூர் அருகே வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஏற்கனவே 189 நபர்களிடம் விசாரணை செய்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
மேலும், 31 நபர்களி டம் டி.என்.ஏ., பரிசோதனை எடுத்ததில் குடிநீர் மாதிரி சோதனை முடிவோடு டி.என்.ஏ., ஒத்துப்போகாததால் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இதுவரை திணறி வருகின்றனர்.
தொடர்ந்து, அதே ஊரைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளிராஜாவின் செல்போன் சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்கப்பட்டு முரளிராஜாவிடம் குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.
அதேபோன்று அந்த செல்போன் பதிவை ஆதாரத்தை கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று நபர்களிடம் சென்னையில் உள்ள குரல் மாதிரி பரிசோதனை மையத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குரல் மாதிரி பரிசோதனை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில், ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளிராஜாவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகமாறு சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., கல்பனா தத் சம்மன் அனுப்பி இருந்தநிலையில், நேற்று காலை புதுக்கோட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்காக முரளிராஜா மற்றும் வக்கீல்களுடன் ஆஜரானார். அவரை மட்டும் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அனுமதித்து, விசாரணை நடத்தப்பட்டது.
டி.எஸ்.பி., கல்பனா தத் தலைமையில் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் முரளிராஜாவிடம் காலை 11 மணி முதல் விசாரணை மேற்கொண்டனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணை தீவிரத்தை பார்க்கும் போது, வேங்கைவயல் விவகாரம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.