மின்சார சேவைகளுக்கு விரைவாக தீர்வு காண மொபைல் செயலி அறிமுகம்
மின்சார சேவைகளுக்கு விரைவாக தீர்வு காண மொபைல் செயலி அறிமுகம்
ADDED : ஜூலை 09, 2024 04:11 AM
சென்னை : மின்சார சேவைகளுக்காக பெறப்படும் விண்ணப்பம் மீது விரைந்து தீர்வு காண, 'களப்பிரிவு பணியாளர் மொபைல் போன் செயலி' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த செயலியை, 2,811 பிரிவு அலுவலக பணியாளர்கள், பொறியாளர்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
செயலியில், மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள், கட்டணம் செலுத்திய இணைப்புகளின் விபரத்தை அறிய முடியும்; இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நுகர்வோர் பணம் செலுத்தியதும், அலுவலகம் செல்லாமல் செயலியில் சரிபார்த்து மின் இணைப்பு வழங்க முடியும்
மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட, கணக்கு எடுக்கப்படாதவர்களின் விபரத்தை அறிய முடியும்; இதனால், கணக்கெடுக்க அலட்சியம் காட்ட முடியாது
மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் பளு குறைப்பு அல்லது அதிகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுத்த நடவடிக்கை, நிலுவை விண்ணப்பம் அறிய முடியும்
மின்னகம் சேவை மையம், இணையதளத்தில் மின்சார சேவை தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார் மற்றும் அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் அறிய முடியும்.
எனவே, செயலியில் உள்ள விபரங்களை உயரதிகாரிகள் எங்கிருந்தும் அறிய முடியும். இதனால், பொறியாளர்கள் மின்சார சேவைகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதிக்காமல், விரைந்து தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

