பந்தலுார் காப்பகத்தில் புதைந்துள்ள மர்மம் உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை
பந்தலுார் காப்பகத்தில் புதைந்துள்ள மர்மம் உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை
ADDED : ஜூலை 12, 2024 01:45 AM

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் என்பவர், 1999 முதல், 'லவ்ேஷர்' எனும் பெயரில் 'சாரிட்டபிள் டிரஸ்ட்' நடத்தி வந்தார். இதற்கு எந்த அனுமதியும் பெறாத நிலையில், மனநல காப்பகமாக மாற்றி செயல்படுத்தி வந்தார்.
அங்கு, 500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், 200 பேர் உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டனர்.
மீதம் உள்ளவர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இன்றி அனைவரும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து, கலெக்டருக்கு புகார் சென்றது.
தொடர்ந்து, கடந்த, 9-ம் தேதி அதிகாரிகள் ஆய்வு செய்து காப்பகத்திற்கு, 'சீல்' வைத்ததுடன், அங்கிருந்த, 13 மன நோயாளிகள் மற்றும் இரண்டு பணியாளர்களை கோவை மற்றும் ஊட்டி காப்பகங்களில் சேர்த்தனர்.
இந்நிலையில், காப்பகத்தில் இதுவரை, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் உடல்கள் காப்பகத்தை ஒட்டிய சதுப்பு நிலத்தில் யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்யப்பட்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, காப்பக உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, காப்பக பொறுப்பாளர் எலிசபெத் உட்பட, 10 பேரிடம் நெலாக்கோட்டை ஸ்டேஷன் போலீசார் நேற்று விசாரணையை துவக்கினர்.
டி.எஸ்.பி., சரவணன் கூறுகையில், ''இந்த சம்பவம் தொடர்பாக, அகஸ்டின் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
''காப்பகத்தில் இறந்தவர்களை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துள்ளனர். இங்கு நடந்த பண பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்,'' என்றார்.

