ஈஷா மையத்தில் மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டதாக தகவல்
ஈஷா மையத்தில் மாயமான 6 பேரில் 5 பேர் திரும்பி விட்டதாக தகவல்
ADDED : ஏப் 18, 2024 09:44 PM
சென்னை:கோவை மாவட்டம் ஈஷா மையத்தில், காணாமல் போன ஆறு பேரில், ஐந்து பேர் திரும்பி வந்து விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் தாக்கல் செய்த மனு:
என் சகோதரர் கணேசன், ஈஷா யோகா மையத்தில் சேவை செய்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி, ஈஷா மையத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு, 'சகோதரர் கணேசன் இங்கு வந்துள்ளாரா' என்று கேட்டனர். இரண்டு நாட்களாக மையத்துக்கு அவர் வரவில்லை என்றும் தெரிவித்தனர். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஈஷா யோகா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் என்பவர், கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மெத்தனமாக செயல்படுகின்றனர். இதனால், எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. என்சகோதரரை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், 'கடந்த 2016 முதல் வெவ்வேறு தேதிகளில் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர். அதுகுறித்து, விசாரணை நடக்கிறது' என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ''ஈஷா மைய ஊழியர்கள், தன்னார்வலர்கள் என இதுவரை, 36 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
ஏற்கனவே காணாமல் போன ஆறு பேர், தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே சென்றனர். அவர்களில், ஐந்து பேர் திரும்பி விட்டனர். மனுதாரரின் சகோதரரை இன்னும் காணவில்லை. விசாரணைக்கு அவகாசம் வேண்டும்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை, ஜூன் 7க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

