'மாஜி' மீதான வழக்கில் கவர்னர் ஒப்புதல் இல்லை என தகவல்
'மாஜி' மீதான வழக்கில் கவர்னர் ஒப்புதல் இல்லை என தகவல்
ADDED : ஆக 31, 2024 02:00 AM
சென்னை:'முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க, இதுவரை கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் முன்ஜாமின் வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான புகாரின் தற்போதைய நிலை என்ன' என, அரசு தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக, அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க, கடந்தாண்டு கவர்னரின் ஒப்புதல் பெற, தமிழக அரசு தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை அந்த கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. கவர்னர் ஒப்புதல் வழங்கியதும், லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை துவங்கும்,'' என்றார்.