ADDED : ஆக 22, 2024 03:06 AM
சென்னை:ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமிடம், அமலாக்கத் துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்., 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை, ஆக., 12ல் அமலாக்கத் துறை கைது செய்தது. முகமது சலீமை, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அமலாக்கத் துறை காவல் முடிந்து, நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன், முகமது சலீம் ஆஜர்படுத்தப்பட்டார். மீண்டும் காவல் கேட்டு, அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்படாததால், முகமது சலீமை, செப்., 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.