மதுரையில் முதன்முறையாக நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம்
மதுரையில் முதன்முறையாக நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம்
ADDED : பிப் 15, 2025 12:33 AM

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வி.லட்சுமிநாராயணன், பி.வடமலை 2023ல் நியமிக்கப்பட்டனர். அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
பணி சுழற்சி முறையில் தற்போது இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்கின்றனர். வழக்கமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவிப்பிரமாணம் நடைபெறும்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மதுரை கிளையில் மூன்று நாட்களாக வழக்குகளை விசாரித்தார். இதனால், இரு நீதிபதிகளையும் நிரந்தரநீதிபதிகளாக நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மதுரை கிளையில் பதவிப்பிரமாணம் நடந்தது இதுவே முதல்முறை.
நிர்வாக நீதிபதி ஜெ.நிஷாபானு, இதர நீதிபதிகள், பதிவாளர் ஜெனரல் அல்லி, வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 75 ஆக உள்ள நிலையில், தற்போது 56 நிரந்தர நீதிபதிகள், ஒன்பது கூடுதல் நீதிபதிகள் உள்ளனர்.