ADDED : ஏப் 24, 2024 07:57 PM

திண்டுக்கல்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடந்ததையொட்டி தேர்தல் விதி அமலில் இருந்ததால் கட்சி தலைவர்கள் சிலைகள்,அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மறைக்கப்பட்டது.
திண்டுக்கல் நகரிலும் இதேபோல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை, அண்ணாசிலை,காமராஜர் சிலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகள் வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது. திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலை திறந்து கிடந்தது. தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் எல்லாசிலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் காமராஜர் சிலை மட்டும் திறந்திருப்பது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலறிந்த திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி காமராஜர் சிலையை மீண்டும் வெள்ளை துணியால் மூடும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

