வரலாற்றில் அழியாத முத்திரை பதித்தவர் கருணாநிதி: பிரதமர் மோடி
வரலாற்றில் அழியாத முத்திரை பதித்தவர் கருணாநிதி: பிரதமர் மோடி
ADDED : ஆக 19, 2024 04:50 AM

சென்னை: 'வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் நம்பிக்கையுடன் நடைபோடும் இந்த வேளையில், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும்' என, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி:
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கருணாநிதிக்காக நடக்கும் முக்கியமான விழா.
அவர் இந்திய அரசியல், இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய தலைவர். தமிழகத்தின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும், எப்போதும் அக்கறை கொண்டவராக திகழ்ந்தார். சிறந்த அரசியல் தலைவராக விளங்கிய கருணாநிதி, பலமுறை மக்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அப்பதவியில் இருந்து, சமூக வளர்ச்சி மற்றும் அரசியல் குறித்த, அவரது ஆழமான புரிதலை அடிக்கோடிட்டு காட்டும் வகையில், நம் நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்.
பன்முகத்திறமை கொண்டவர் அவர், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்க எடுத்த முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவு கூரப்படுகின்றன. அவரது இலக்கிய திறமை, அவரது படைப்புகளில் பிரகாசித்ததுடன், அவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டத்தையும் பெற்று தந்தது.
அவரது நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவது, அவரது மரபு மற்றும் அவரது பணிகளை என்றென்றும் நினைவூட்டும். இந்த முக்கியமான தருணத்தில், கருணாநிதிக்கு என் இதயப்பூர்வமான அஞ்சலி.
2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி, நாம் நம்பிக்கையுடன் நடைபோடுகிறோம். இந்த வேளையில், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தை தொடர்ந்து வடிவமைக்கும். கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வெற்றி அடைய வாழ்த்துகள்.
இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

