முல்லை பெரியாறில் புதிய அணை கேரள திட்டத்தை பரிசீலிக்க கூடாது
முல்லை பெரியாறில் புதிய அணை கேரள திட்டத்தை பரிசீலிக்க கூடாது
ADDED : மே 25, 2024 02:47 AM
சென்னை:'உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த, கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை, மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது' என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு செய்ய, கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. அந்த கருத்துருவை, மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு, தமிழக அரசு சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு, கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் கருத்துருவை, வர உள்ள கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது.
தற்போதுள்ள முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணையை கட்டுவதற்கான கேரள அரசின் முன்மொழிவு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முற்றிலும் எதிரானது. தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என, பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. இதை, உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.
கடந்த 2018ல், புதிய அணை கட்ட ஆய்வு செய்ய, கேரள அரசு முயற்சித்தபோது, தமிழக அரசு சார்பில், இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. புதிய அணை கட்டுவது தொடர்பாக, எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என, அப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது ஆகியவை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.
இப்பிரச்னையில், தமிழக அரசின் நீர்வளத்துறை செயலர், ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களுக்கும், தமிழக அரசின் ஆட்சேபனையை விரிவாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை, தொடர்புடைய துறைகள் கடைப்பிடிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும்.
எனவே, வரும் 28ம் தேதி நடக்கும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளை நீக்க வேண்டும்.
எதிர்காலத்தில் கேரள அரசின் இது போன்ற எந்தவொரு கருத்துருவையும், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என, மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் குழு உறுப்பினர் செயலருக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

