ரியல் எஸ்டேட் அதிபர் ரூ.20 லட்சம் கேட்டு கடத்தல்; திட்டம் தீட்டிய நண்பர் உட்பட 5 பேர் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் ரூ.20 லட்சம் கேட்டு கடத்தல்; திட்டம் தீட்டிய நண்பர் உட்பட 5 பேர் கைது
ADDED : ஜூலை 08, 2024 11:47 PM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நவதியைச் சேர்ந்தவர் பீரேஷ், 34, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். ஓசூர் தின்னுார் ஆர்.கே., அவென்யூவைச் சேர்ந்தவர் முரளி, 36. இருவரும் நண்பர்கள்.
பீரேஷ் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக பணம் சம்பாதித்துள்ளதால், அவரை கடத்தி பணம் பறிக்க, முரளி மற்றும் அவரது தரப்பினர் திட்டம் தீட்டினர்.
புகார்
அதன்படி, 7ம் தேதி நள்ளிரவு, 12:30 மணிக்கு, வீட்டின் அருகே இருந்த பீரேஷை, 'மாருதி சுசூகி' காரில், முரளி தரப்பினர் கிருஷ்ணகிரிக்கு கடத்தினர். பீரேஷின் மனைவி ரேணுகா, 30, கணவரை காணவில்லை என, மத்திகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
ரேணுகாவிற்கு போன் செய்த கடத்தல் கும்பல், 'பீரேஷை கடத்தி வைத்துள்ளோம், 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவோம்' என மிரட்டியது. இந்த தகவல், மத்திகிரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தருவதாக கடத்தல் கும்பலிடம் பீரேஷ் கூறினார்.
அதன்படி, நேற்று காலை, 6:30 மணிக்கு அந்திவாடி சோதனைச்சாவடி அருகே, பீரேஷை கடத்திய கும்பல் காரில் வருவதையறிந்த, போலீசார் மிடிகிரிப்பள்ளி பிரிவு சாலை அருகே காரை மடக்கி, பீரேஷை மீட்டனர்.
மீட்பு
காரிலிருந்த, ஐவரை விசாரித்தபோது, பீரேஷின் நண்பர் முரளி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கோவில்பட்டி சதீஷ், 32, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மதிவாணன், 33, சேலம், சீலநாயக்கன்பட்டி பார்த்தசாரதி, 32, கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி அம்பேத்கர் காலனி அமில்தாஸ், 28, என தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர். பீரேஷ் கடத்தப்பட்ட, 30 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

