கு.க., ஆப்பரேஷன் செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்
கு.க., ஆப்பரேஷன் செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்
ADDED : ஜூலை 20, 2024 03:04 AM

ராமநாதபுரம் : -அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்த போது பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். இதனை கண்டித்து உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அருகே வடக்கு மல்லல் கிராமத்தை சேர்ந்த மைக்செட் தொழிலாளி தங்கச்சாமி. இவரது மனைவி தவசித்ரா 26. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக ஜூன் 15 ல் உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாதாரண பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷனுக்காக தவசித்ரா ,பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜூலை 17 ல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சையின் போது அவருக்கு நாடித்துடிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தவசித்ரா நேற்று இறந்தார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 'டாக்டர்களின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்கு காரணம்,' என கூறினர். மேலும் தவசித்ராவின் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் ராமேஸ்வரம்--மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிவராமன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். இதையடுத்து மறியலை கைவிட்டவர்கள் மருத்துவமனைக்குள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

