கொங்கு மண்டலம் தமிழக முதல்வரை மன்னிக்காது! வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., காட்டம்
கொங்கு மண்டலம் தமிழக முதல்வரை மன்னிக்காது! வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., காட்டம்
ADDED : செப் 14, 2024 09:09 PM
கோவை:கோவை தெற்கு தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை:
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், ஜி.எஸ்.டி., குறித்த தொழிமுனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தவரை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறியிருக்கிறார்.
கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து, அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு தி.மு.க., அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசைதிருப்பி, நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
தி.மு.க., அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்துவரி, பதிவு கட்டண உயர்வாலும், 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, கோவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில், மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனோர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சி பெரும் வெற்றிபெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்போது நடந்த சாதாரண நிகழ்வை பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேட தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.
கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மன்னிக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.