ADDED : மே 13, 2024 03:37 AM

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பிரபல 'யு டியூபர் சவுக்கு சங்கரை, சென்னை மாநகர போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த பிரபல யு டியூபர் சவுக்கு சங்கர், 48. பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தேனி மாவட்ட போலீசார், காரில் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிந்துள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள, சங்கரின் அலுவலகம், மதுரவாயலில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி, கஞ்சா சிகரெட், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 'ஹூண்டாய் வென்யூ' கார், பழைய பாஸ்போர்ட், சிகரெட் ஆஸ்ட்ரே உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சங்கர் மீது, சென்னை மாநகர போலீசார், மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் 'டெண்டர்' விவகாரம் குறித்து, போலி ஆவணங்கள் தயாரித்து வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வழக்குகள் விசாரணையில் உள்ளன; இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, சென்னை மாநகர போலீசார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம்.
அதுபற்றிய தகவல், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் வாயிலாக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கருக்கு, முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளனர்.