உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெற்ற தொழிலாளர் ஆய்வாளருக்கு சிறை
உரிமம் புதுப்பிக்க லஞ்சம் பெற்ற தொழிலாளர் ஆய்வாளருக்கு சிறை
ADDED : ஆக 30, 2024 02:46 AM

தஞ்சாவூர்,:தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி.
இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசை புதுப்பித்து முத்திரை பெறுவதற்காகவும், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.
அப்போது தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜெயலட்சுமி, 64, என்பவர், 2,500 ரூபாய் லஞ்சமாக கேட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அந்தோணிசாமி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு ஜெயலட்சுமி லஞ்சம் வாங்கிய போது, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
இவ்வழக்கு, கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா நேற்று ஜெயலட்சுமிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

