மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம்
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள்: தலைவர்கள் புகழாரம்
ADDED : ஆக 25, 2024 12:23 PM

சென்னை: மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நடிகர் கமல் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலையை பிரேமலதா திறந்து வைத்தார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'' தே.மு.தி.க., நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி இடம் பிடித்திருந்தவர். நேர்மையும் துணிச்சலும் உடைய தலைவராக விளங்கியவர். எளிய மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்த பண்பாளர் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத் திருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,
''இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேமுதிக நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், திரை வாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்'' என இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன் என கமல் பாராட்டியுள்ளார்.

