புதிய ஒப்பந்ததாரர்கள் பதிவுக்கு ஒரே இணையதளம் துவக்கம்
புதிய ஒப்பந்ததாரர்கள் பதிவுக்கு ஒரே இணையதளம் துவக்கம்
ADDED : செப் 14, 2024 12:46 AM
சென்னை:பொதுப்பணி, நெடுஞ்சாலை, நீர்வளம், வேளாண் பொறியியல், வீட்டுவசதி வாரியம், வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் வாயிலாக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. பல்வேறு வகையான பொருட்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதற்கென ஒவ்வொரு துறையிலும், தனித்தனியாக ஒப்பந்ததாரர் பதிவு நடைபெறுகிறது. இதற்கு, வருவாய் துறை வாயிலாக சொத்து நிலை சான்று, உள்ளாட்சி அமைப்புகளிடம் பணி அனுபவ சான்று உள்ளிட்டவற்றை பெற்று, குறிப்பிட்ட கட்ட ணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும்.
அதன்பின், ஒப்பந்ததாரர் பதிவு ஏற்கப்படும். காகித நடைமுறைகள் வாயிலாக, இப்பணிகள் நடந்து வந்தன.
கடந்த ஜூலை 1 முதல், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றி நிதித்துறை உத்தரவிட்டது. இதற்கென தனி இணையதள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த இணையதள முகவரியை பயன்படுத்தி, அரசின் இ - சேவை மையங்களில் மட்டுமே, ஒப்பந்ததாரர் பதிவு நடந்து வருகிறது.
இந்த முறையில், ஒப்பந்ததாரர் பதிவுக்கு மாதக்கணக்கில் காத்திருக்காமல் உடனுக்குடன் பதிவு நடப்பதால், அரசு துறைகளுக்கு கட்டுமான பொருட்கள் வினியோகம் செய்யும் தொழிலில் இறங்குபவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
அதேநேரத்தில், பழைய ஒப்பந்ததாரர் பதிவு புதுப்பிப்புக்கு, இதில் வசதி தரப்படவில்லை. அதனால், பதிவு காலாவதியானவர்கள், புதிய பணிகளை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய இணையதளத்தில் ஒப்பந்ததாரராக பதிவு செய்பவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், ஒப்பந்ததாரர் புதுப்பிப்பு நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பழைய ஒப்பந்ததாரர்கள் குறித்த விபரங்கள் இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாததே அதற்கு காரணம். இப்பணிகள் முடிந்தால் மட்டுமே, ஒப்பந்ததாரர் பதிவை புதுப்பிக்க முடியும். விரைவில், இப்பணியை முடிக்காமல் நிதித்துறை காலம் தாழ்த்தி வருகிறது.
இது தெரியாமல், நாள்தோறும் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் பதிவை புதுப்பிக்கும் விபரம் கேட்டு, அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். பதிவுக்காலம் முடிந்த ஒப்பந்ததாரர்கள் புதிய பணியை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

