தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்தது நீர் மின் உற்பத்தி
தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்தது நீர் மின் உற்பத்தி
ADDED : ஏப் 30, 2024 10:34 PM
சென்னை:தமிழக மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. மழை பெய்யும் போது, அந்த மின் நிலையங்களை ஒட்டியுள்ள அணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில், 1 யூனிட் நீர் மின் உற்பத்தி செலவு சராசரியாக, 75 காசுக்கு குறைவாக உள்ளது.
போதிய மழை இல்லாததால், தற்போது அணைகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால், தினமும் காலையில் சராசரியாக, 500 மெகா வாட் வரையும்; மாலையில், 750 மெகா வாட் வரையும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தண்ணீர் வரத்து நன்றாக இருக்கும் சமயத்தில், நீர் மின் நிலையங்களில் தினமும், 1,500 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது, தண்ணீர் இருப்பு மிகவும் குறைவு. காலை 6:00 மணிக்கே, சூரிய வெளிச்சம் கிடைப்பதால், சூரியசக்தி மின்சாரம் அதிகம் உற்பத்தியாகிறது.
எனவே, காலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த, 75 மெகா வாட்டிற்கு குறைவாகவும்; மாலையில், 500 மெகா வாட் வரையும் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
கோவை காடம்பாறை நீரேற்று மின் நிலையத்தில் அதிக அளவாக, 300 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு மட்டுமே ஒரு முறை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர், மீண்டும் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.