ADDED : மே 02, 2024 02:05 AM
சென்னை:இதயம் காப்போம் திட்டம் வாயிலாக, மாரடைப்பு ஏற்பட்ட, 7,171 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
இதயம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு அடித்தளமாக, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளது.
எனவே, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
நோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் வகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாதந்தோறும் வீடுகளுக்கே சென்று, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அம்மாத்திரைகளை முறையாக எடுக்காதவர்கள், உணவு முறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இவற்றை தவிர்க்கும் வகையில், இதயம் காப்போம் திட்டமும் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டம் வாயிலாக, மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு உடனடி, தற்காலிக தீர்வான ஆஸ்பிரின், க்ளோபிடோக்ரல், அட்ரோவாஸ்டின் ஆகிய மூன்று விதமான மாத்திரைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இதயம் காப்போம் திட்டம், 2023 ஜூன் 27ல் துவக்கப்பட்டு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செயல்பாட்டில் உள்ளது.
இதுவரை மாரடைப்பு ஏற்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்த, 7,171 பேருக்கு, உடனடி மாத்திரைகள் வழங்கப்பட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் வாயிலாக, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில், 25,487 மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

