ADDED : மே 06, 2024 12:36 AM
சென்னை: கிராம நிர்வாக அதிகாரி மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்யும்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் உள்ளிட்டோருக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அனுப்பியுள்ள கடிதம்:
கடந்த ஏப்ரல் 19ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, திருப்புவனம் தாலுகா, மாங்குடி வி.ஏ.ஓ., அன்புச்செல்வன், அந்த பகுதி ஓட்டுப்பதிவு மையத்தில், தேர்தல் அலுவலராக பணிபுரிந்துள்ளார். இரவு 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை திரும்ப ஒப்படைக்கும் போது, அவற்றை பெற வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்து முருகன், வி.ஏ.ஓ.,விடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
கைகலப்பு ஏற்பட்டதில், இருவரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். வழக்கும் பதிவாகி உள்ளது. இதனால், ஓட்டுச்சாவடியில் இருந்து, ஒரு மணிநேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில், அன்புசெல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது, ஒருதலைபட்சமான நடவடிக்கை.
எனவே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட வி.ஏ.ஓ., அன்புசெல்வன் மீதான உத்தரவை உடனே ரத்து செய்ய வண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.