கடன் தந்தவரை கொன்று எரித்த முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 3 பேருக்கு ஆயுள்
கடன் தந்தவரை கொன்று எரித்த முன்னாள் ஊராட்சி தலைவர் உட்பட 3 பேருக்கு ஆயுள்
ADDED : ஜூலை 12, 2024 05:33 PM
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நாசர்புளியங்குளம் அருகே ஆலங்குளம் கண்மாயில் கடன் தந்த மூக்கையாவை 60, கொன்று எரித்த அருப்புக்கோட்டை காளையார்கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வக்குமார் 49, முருகன் 44, சோனைபாண்டி 28, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் மூக்கையா. வட்டிக்கு கடன் வழங்கும் தொழில் செய்து வந்தார். அருப்புக்கோட்டை காளையார் கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி தலைவரான செல்வக்குமாரும், அதே பகுதியை சேர்ந்த முருகனும் இவரிடம் அவ்வப்போது கடன் பெற்று செலுத்தி வந்தனர். 2018ல் ரூ.2 லட்சம் வரை இருவரும் தர வேண்டிய நிலையில் மூக்கையா இருவரையும் திட்டி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமாரும், முருகனும், சோனை பாண்டி என்பவருடன் சேர்ந்து 2018 பிப்., 15ல் சமாதானமாக பேசி மூக்கையாவை காரியாபட்டி நாசர்புளியங்குளத்திற்கு அருகே ஆலங்குளம் கண்மாய்க்கு அழைத்து சென்றனர். அங்கு நால்வரும் மது குடித்தனர். அப்போது மூவரும மூக்கையா அணிந்திருந்த துண்டால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.
அவரிடம் இருந்து செயின், மோதிரத்தை எடுத்து கொண்டு கண்மாயில் உடலை விட்டு சென்றனர். பின்னர் இரவு மூவரும் காளையார்கரிசல்குளத்தை சேர்ந்த சங்கர் 28, என்பவருடன் சேர்ந்து டீசல் வாங்கி வந்து கண்மாயில் உடலை எரித்தனர்.
முதலில் அடையாளம் தெரியாத உடல் கண்டறியப்பட்டதாக வழக்கு பதியப்பட்ட நிலையில் தொடர் விசாரணையில் செல்வக்குமார், முருகன், சோனை பாண்டி கொலை செய்ததும், மூக்கையாவின் நகைகளை அதே ஊரை சேர்ந்த வழியன், ரவியிடம் அவர்கள் கொடுத்ததும் தெரிந்தது. செல்வக்குமார், முருகன், சோனை பாண்டி, சங்கர், வழியன், ரவி ஆகிய 6 பேர் மீது காரியாபட்டி ஆவியூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சங்கர், வழியன், ரவி விடுவிக்கப்பட்டனர். செல்வக்குமார், முருகன், சோனை பாண்டி மூவருக்கும் ஆயுள் தண்டனையும், செல்வக்குமாருக்கு ரூ. 2ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்தக்குமார் தீர்ப்பளித்தார்.

