ADDED : ஜூலை 26, 2024 01:40 AM
சென்னை::நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த, லாரி டிரைவர்கள் குடும்பத்திற்கு, தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், தாத்தையங்கார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னன்னன். கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.வெள்ளாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இருவரும் கடந்த 16ம் தேதி, எல்.பி.ஜி., டேங்கர் லாரியில் டிரைவர்களாக சென்றனர்.
கர்நாடகா மாநிலம், சிரூரு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். இதை அறிந்த முதல்வர், அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

