'லோ வோல்டேஜ்' பிரச்னை: மத்திய மின் துறை அறிவுறுத்தல்
'லோ வோல்டேஜ்' பிரச்னை: மத்திய மின் துறை அறிவுறுத்தல்
ADDED : மே 24, 2024 04:10 AM
சென்னை : சென்னை உள்ளிட்ட இடங்களில், 'லோ வோல்டேஜ்' ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக மின் வாரியத்தை, மத்திய மின் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்தது; வீடுகளில், 'ஏசி' சாதனத்தின் பயன்பாடு அதிகரித்தது. இது தவிர, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களிலும் மின் பயன்பாடு அதிகம் இருந்தது.
நடவடிக்கை
டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்களில், அதன் திறனுக்கு ஏற்ப, எத்தனை இணைப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய வேண்டுமோ, அந்த அளவுக்கு தான் செய்ய வேண்டும்.
அதை விட அதிகமாக மின் வினியோகம் செய்யும் போது, 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது.
இதனால், வீடு உள்ளிட்ட இணைப்புகளில் மின்சாரம் இருந்தாலும், 'ஏசி, மோட்டார் பம்ப்' போன்ற சாதனங்களை இயக்க முடியவில்லை.
கடந்த ஏப்ரலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம்; திருவள்ளூரில் மணலி, அலமாதி; சென்னையில் புளியந்தோப்பு, சோழிங்கநல்லுார்; திருப்பூர், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர், கடலுார், நெய்வேலியில், லோ வோல்டேஜ் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக, மின் வாரியத்திடம் மத்திய மின் துறை தெரிவித்துள்ளது; சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.
கூடுதல் வழித்தடம்
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் தேவை அதிகம் இருக்கும்போது, லோ வோல்டேஜ் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சுங்குவார்சத்திரம், புளியந்தோப்பு, மணலி, அலமாதி, சோழிங்கநல்லுாரில் உள்ள துணை மின் நிலையங்களில், 'கெபாசிட்டர்' கருவி பொருத்தப்படும்.
மின் வழித்தடங்களில் செல்லும் மின் பளுவின் அளவை ஆராய்ந்து, கூடுதல் வழித்தடங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.