மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம் விழாக்கோலம் பூண்டது மதுரை
மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம் விழாக்கோலம் பூண்டது மதுரை
ADDED : ஏப் 18, 2024 12:26 AM

மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அரசாளும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நாளை நடக்கிறது. மதுரையில், நாளை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சி ஆட்சி நடக்கும் என்பது ஐதீகம். இதன் பிறகு, சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் நடக்கும்.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.
நேற்று தங்கச்சப்பரத்திலும், தங்கம், வெள்ளி ரிஷப வாகனத்திலும் உலா வந்தனர்.
திருவிழாவின் எட்டாம் நாளான நாளை இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் அம்மன் சன்னிதி ஆறுகால் பீடத்தில், அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடக்கிறது. அம்மனிடம் தக்கார் ருக்மணி செங்கோல் பெற்று இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்க்கிறார்.
இதைதொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 20, திருவிழாவின் ஒன்பதாம் நாளன்று இரவு, அம்மன் இந்திர விமானத்தில் திக்குவிஜயம் செல்கிறார்.
ஏப்., 21 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வருகிறார். ஏப்., 22 காலை தேரோட்டம் நடக்கிறது.
கள்ளழகர் வருகிறார்
வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்துடன் ஏப்., 21 மாலை 6:25 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் மதுரை புறப்படுகிறார். ஏப்., 22 காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
இரவு 8:00 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலில், தங்கக்குதிரையில் சுவாமி எழுந்தருளுகிறார்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துக் கொண்டு, வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் ஏப்., 23 அதிகாலை 3:00 மணிக்கு 1,000 பொன் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மக்கள் வெள்ளத்தில் நீந்தி அதிகாலை 5:51 மணி முதல் 6:10 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
பின்னர் காலை 7:25 மணிக்கு ஆற்றில் இருந்து புறப்பட்டு, ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு மதியம் 12:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவமும், அங்கப்பிரதட்சணமும் நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில் செல்கிறார்.
ஏப்.,24 வைகையாறு தேனுார் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கிறார்.
இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்., 26 அதிகாலை கள்ளர் அலங்காரத்துடன் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார். ஏப்., 27 காலை 10:32 மணி முதல் 11:00 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.

