ADDED : ஜூன் 19, 2024 02:33 AM
சென்னை:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என, தலைமை தேர்தல் ஆணையருக்கு, பா.ம.க., கடிதம் எழுதியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, வரும் ஜூலை 10ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தை பா.ம.க., இழந்துள்ளதால், மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாம்பலம் சின்னம் ஒதுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திற்கு, பா.ம.க., கடிதம் அனுப்பியுள்ளது.
கடிதத்தில், '20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தேர்தல்களில் மாம்பழம் சின்னத்தில், பா.ம.க., போட்டியிட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்ததாலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், மாம்பழம் சின்னத்தையே ஒதுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடாததால், தி.மு.க., -- பா.ம.க., - நாம் தமிழர் கட்சி என, மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
