காலி மது பாட்டில்களை தயாரிப்பு நிறுவனங்களே திரும்ப பெறும்: முத்துசாமி
காலி மது பாட்டில்களை தயாரிப்பு நிறுவனங்களே திரும்ப பெறும்: முத்துசாமி
ADDED : ஆக 22, 2024 11:14 PM
சென்னை:''காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் ஒப்பந்தத்தை, மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடமே வழங்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது,'' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
'டாஸ்மாக்' கடைகளில் மது வாங்குவோர், மதுவை அருந்திவிட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசுகின்றனர். இதனால், மலைப்பகுதிகளில் பாட்டிலை மிதித்து வன விலங்குகள் உயிரிழக்கின்றன. எனவே, மது கடைகளிலேயே காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் வந்தபோது, 'காலி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டம், வரும் நவம்பருக்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும்' என, உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
இதுகுறித்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி:
காலி பாட்டிலை சாலை, வயல், நீர் நிலைகளில் வீசி செல்வதை தடுக்க, ஒன்பது மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் முறை செயல்படுத்தப்படுகிறது. இதனால் சிரமம், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்ற வழிகாட்டுதல் படி, மதுபானங்கள் தயாரித்து வழங்கும் ஆலைகளே காலி பாட்டில்களை திரும்ப எடுத்துக் கொள்ள செய்யலாமா அல்லது, 'டெண்டர்' கோரி ஒப்பந்த நிறுவனங்களுக்கு மது பாட்டில்களை எடுத்து கொள்ள அனுமதிக்கலாமா என்ற பரிசீலனை நடக்கிறது.
இதில், மது ஆலைகளே பாட்டிலை திரும்ப பெறுவதில் சிரமங்கள் குறைவு என்ற ரீதியில், அவர்களிடமே டெண்டரை ஒப்படைக்க பரிசீலிக்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் வழக்கு விசாரணை வருவதால், அதற்கு முன் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.