உம்மன் சாண்டி குடும்பத்தினர் பா.ஜ.,வில் இணைய திட்டமா மறுக்கிறார் மரியாம்மா உம்மன்
உம்மன் சாண்டி குடும்பத்தினர் பா.ஜ.,வில் இணைய திட்டமா மறுக்கிறார் மரியாம்மா உம்மன்
ADDED : ஏப் 02, 2024 02:08 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பா.ஜ.,வில் இணைய மாட்டார்கள் என்று அவரது மனைவி மரியாம்மா உம்மன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கேரளாவில் காங்., மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா உள்ளிட்ட சிலர் பா.ஜ.,வில் இணைந்தனர். இந்நிலையில் உம்மன் சாண்டியின் குடும்பத்தில் சிலர் பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் பரவியது. இதை அவரது மனைவி மரியாம்மா உம்மன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
சிலரைப் போல உம்மன்சாண்டியின் குடும்பத்தில் எவரும் பா.ஜ.,வில் இணையப் போவதில்லை. சிலர் திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருகின்றனர்.
இதில் எந்த உண்மையும் கிடையாது. இவ்வாறு கூறுவது உம்மன்சாண்டியின் ஆன்மாவுக்கு வேதனையை ஏற்படுத்தும். எங்கள் குடும்பம் கடைசிவரை காங்., பக்கம் தான் இருக்கும்.
தற்போது நடைபெறப் போவது மிக முக்கியமான தேர்தலாகும். இனி ஒரு தேர்தல் இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கும் சூழ்நிலையில் காங்., கூட்டணியின் வெற்றிக்காக முடிந்தவரை போராட வேண்டும். இது உம்மன் சாண்டி இல்லாத முதல் தேர்தல். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் காங்., கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
உம்மன் சாண்டி பலமுறை புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட போதிலும் இதுவரை அவரது மனைவி மரியாம்மா உம்மன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தற்போது இந்த தேர்தலில் முதன்முறையாக அவரும் பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளார்.
இன்று கோட்டயத்தில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். மகன் சாண்டி உம்மன் மகள்களான மரியா உம்மன், அச்சு உம்மன் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏ. கே . அந்தோணியின் மகன் அனில் அந்தோணியும், அச்சு உம்மனும் சிறு வயது முதலே நெருங்கி பழகிய நண்பர்கள். நாங்கள் இரண்டு பேரும் நண்பர்களாக இருந்தாலும் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடும் அனில் அந்தோணிக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக அச்சு உம்மன் கூறியுள்ளார்.

