முதுமலையில் பராமரித்து வந்த மருதமலை குட்டி யானை உயிரிழந்தது
முதுமலையில் பராமரித்து வந்த மருதமலை குட்டி யானை உயிரிழந்தது
ADDED : ஜூன் 28, 2024 11:20 PM

கூடலூர்: கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியில், 30ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட 40, வயது பெண் யானை 4 மாத குட்டி யானையுடன் தரையில் படுத்து நிலைவில் இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர். கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனிடையே, குட்டி யானை வேறொரு யானையுடன் சென்று விட்டது.
தொடர் சிகிச்சைகளு பின் உடல்நலம் குணமடைந்ததால், பெண் யானையை, ஐந்து நாட்களுக்குப் பின் வனப்பகுதியில் விடுவித்தனர்.இந்நிலையில் தாயைப் பிரிந்து சென்ற குட்டி யானை வனப்பகுதியில் தனியாக நின்றது. வனத்துறையினர் அதனை மீட்டு தாயிடம் சேர்க்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தாய் யானை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
தொடர்ந்து, 9ம் தேதி, குட்டி யானை பராமரிப்புக்காக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பாகன் மற்றும் உதவியாளர்கள் நியமித்து, குட்டி யானையை கராவில் வைத்து, வனத்துறையினர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், குட்டி யானைக்கு இன்று, உடல் நிலை பாதிக்கப்பட்டது. கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, இரவு 8:45 மணிக்கு குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. 'இதன் உடல், நாளை காலை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பின்பு உயிரிழப்புக்கான காரணம் தெரியும் வரும்' என வனத்துறையினர் தெரிவித்தனர்.

