ADDED : ஆக 05, 2024 01:09 AM
சென்னை:'டாஸ்மாக் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும்; அடுத்தகட்டமாக, குஜராத், பீஹாரை பின்பற்றி, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ம.தி.மு.க.,வின், 30வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
'டாஸ்மாக் மதுக் கடைகளை அரசு படிப்படியாக மூட வேண்டும். பின், குஜராத், பீஹார் மாநிலங்களை போல, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை பரவி வரும் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்.
'அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, 2022 முதல் ஓய்வு பெற்ற, 6,000 தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய பட்ஜெட்டில், தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, வரும் 14ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.