ADDED : ஆக 13, 2024 03:08 AM

சென்னை: “அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் சார்ந்த கல்வியை தமிழில் தர முடியும். தமிழகத்தில் அதற்கு சாத்தியம் உள்ளதா என்றால், தேசிய மருத்துவ ஆணையத்தின் இசைவை பொறுத்தது,” என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன் பேசினார்.
சென்னை வளர்ச்சி கழகத்தின் பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டு கழகம், அண்ணா பல்கலை பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் ஆகியவை சார்பில், இரண்டாம் உலகத்தமிழ் வளர்ச்சி இரண்டு நாள் மாநாடு, சென்னையில் நேற்று துவங்கியது.
கேலி, கிண்டல்
பள்ளி, கல்லுாரி, பல்கலை, தொழில்நுட்பம், சட்டம், மருத்துவ கல்விகளில் தமிழ் என்ற தலைப்பிலான நிகழ்வில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது:
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் சார்ந்த கல்வியை தமிழில் தர முடியும். தமிழகத்தில் அதற்கு சாத்தியம் உள்ளதா என்றால், தேசிய மருத்துவ ஆணையத்தின் இசைவை பொறுத்தது. சென்னை மருத்துவக் கல்லுாரியில், பிறமொழி மாணவியரும் இருந்தனர்.
அவர்களுக்கான வாய்மொழி தேர்வில், நோயாளி சொல்வதை கேட்டு, அதற்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும். ஆனால், தமிழ், தெலுங்கு பேசுவோர் நோயாளிகளாக வருவர். அதில், மருத்துவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, தமிழ், தெலுங்கு வகுப்புகள் நடந்தன.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றிய போது, தமிழ் மாணவர்களுக்காக, பாடவேளை முடிந்ததும் விளக்க வகுப்புகள் நடத்தினோம். முதலில் ஆர்வம் காட்டிய மாணவர்கள் பின், கேலி, கிண்டலுக்கு ஆளானதால் வரவில்லை.
மருத்துவ துறையில் தினமும் புதிய புதிய சொற்கள் உருவாகும் நிலையில், அவற்றுக்கான தமிழ் கலைச்சொற்களை உடனே உருவாக்கி, அங்கீகரித்து, அதை, பொதுவாக்குவதில் சிக்கல் உள்ளது. நாங்கள், 10,000 கலைச்சொற்களை உருவாக்கி, சொற்குவையில் அளித்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனுமதித்தேன்
அமெட் பல்கலை இணைவேந்தர் திருவாசகம் பேசுகையில், “நான் சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்தபோது, அனைத்து படிப்புகளையும் தமிழில் தேர்வெழுத அனுமதித்தேன். பிஎச்.டி., ஆய்வறிக்கையை தமிழில் சமர்ப்பிக்க வகை செய்தேன். அப்போதில் இருந்து தான், மணிக்கூண்டில், மணிக்கு ஒரு முறை திருக்குறள் ஒலித்தது,” என்றார்.
அரசு சட்ட பல்கலை துணைவேந்தர் சந்தோஷ்குமார் பேசுகையில், “உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், பல்வேறு சட்டங்களில் குழப்பங்கள் வர, பிராந்திய மொழிகளில் சட்டம் இல்லாதது தான் காரணம்.
“அதனால், சட்டங்களும், வழக்காடுதலும் பிராந்திய மொழிகளில் இடம் பெறலாம் என்றார். ஆனாலும், தமிழில் இடம்பெறுவதற்கு பல்வேறு திசைகளில் இருந்தும் தடைகள் வருகின்றன,” என்றார்.
திறந்தநிலை பல்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், “சுதந்திரம் பெற்றதில் இருந்து, தமிழ்வழி கல்விக்காக, 52 அரசாணைகள் வெளியாகி விட்டன. இன்னும் போராடு கிறோம்,” என்றார்.
-பொன்முடி
உயர் கல்வித்துறை அமைச்சர்.