ADDED : ஜூலை 02, 2024 05:40 AM

சிவகங்கை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா, 24, சுபாஷ், 23.
இவர்கள் இருவரும், சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயல் நண்பர்களான ராஜேஷ், 19, சாத்தரசன் பட்டி நவீன், 19, கிளுவச்சி அஜய், 20, ஆகியோருடன் இணைந்து, கல்லணை என்ற பகுதியில் தங்கி மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்தனர்.
கடந்த வாரம், சிவகங்கை அருகே பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் இவர்களது மாடு பங்கேற்றது.
இந்த மாட்டை பிடிப்பதில் புதுப்பட்டியை சேர்ந்த மதன், 20, மற்றும் அவரது நண்பர்களுடன் பிரச்னை ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லணை பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷ், ராஜேஷ், நவீன், அஜய் ஆகியோர் துாங்கி கொண்டிருந்தனர்.
இரவு 10:30 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் எட்டு பேர் சேர்ந்து துாங்கி கொண்டிருந்த ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோரை கூரிய ஆயுதங்களால் தாக்கினர்; மற்ற மூவரும் தப்பி விட்டனர்.
படுகாயமடைந்த ஜெயசூர்யா, சுபாஷ் இறந்தனர். தப்பிய ராஜேஷ், நவீன் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் இருவரின் உடலையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். மதன் உள்ளிட்ட எட்டு பேரை, போலீசார் தேடுகின்றனர்.