ADDED : ஏப் 21, 2024 11:44 PM

தேனி : தேனி பழனிசெட்டிபட்டியில் குடும்பத்தகராறில் மனைவி பவித்ரா 25, மாமனார் மாயி 55, ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பூவேந்திரன் 27, தலைமறைவானார். அவரது நண்பரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உசிலம்பட்டி எருமார்பட்டி விவசாயி மாயி. இவரது மகள் பவித்ரா . இவருக்கும் சுரக்காபட்டி பூவேந்திரனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.4 வயதில் கவின் என்ற மகன் உள்ளார். கணவன் , மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பவித்ரா, தந்தை மாயி வீட்டிற்கு சென்றார். தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள பவித்ராவின் பாட்டி அம்மாபிள்ளை வீட்டிற்கு மாயி, பவித்ரா தனது மகனுடன் வந்தனர்.
நேற்று மாலை பூவேந்திரன், நண்பர் முருகேசன் டூவீலரில் அம்மாபிள்ளை வீட்டிற்கு சென்றனர். பூவேந்திரன் வீட்டிற்குள் சென்று மாமனார், மனைவியுடன் குடும்பத்தகராறில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தான் வைத்திருந்த கத்தியால் இருவரையும் வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் மனைவி, மாமனார் பலியாயினர். பின்னர் டூவீலரில் பூவேந்திரன் தப்பினார். உடன் வந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரிக்கும் பழனிசெட்டிபட்டி போலீசார் பூவேந்திரனை தேடிவருகின்றனர்.

