நாகை எம்.பி., செல்வராஜ் மரணம் சொந்த ஊரில் இன்று தகனம்
நாகை எம்.பி., செல்வராஜ் மரணம் சொந்த ஊரில் இன்று தகனம்
ADDED : மே 14, 2024 04:30 AM

திருவாரூர் : நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி எம்.பி., செல்வராஜ், 67, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 4ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார்.
அவரது உடல், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லிக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் இருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த எம்.பி., செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில், பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகளிலும் பொறுப்பு வகித்தார்.
கடந்த 1989ம் ஆண்டு, நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 1996, 1998, 2019 தேர்தல்களில் நாகை தொகுதியில் வெற்றி பெற்றவர்.
திருவாரூர், நாகை மாவட்ட பகுதியில், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலன் காக்க பணியாற்றியவர். இவரது மனைவி கமலவதனம், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வராஜ் உடல் இன்று காலை 10:00 மணியளவில், சித்தமல்லியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அதற்கான ஏற்பாடுகளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், அவரது குடும்பத்தினரும் செய்து வருகின்றனர்.

