இப்ராஹிம் கூட்டாளியாக செயல்பட்ட பெண்ணை தேடுகிறது என்.சி.பி.,
இப்ராஹிம் கூட்டாளியாக செயல்பட்ட பெண்ணை தேடுகிறது என்.சி.பி.,
ADDED : ஆக 13, 2024 02:52 AM
சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய, தி.மு.க., முன்னாள் நிர்வாகி செய்யது இப்ராஹிம் கூட்டாளிகளை, என்.சி.பி., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம், 54. இவர், தி.மு.க.,வில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை தலைவராக இருந்தார்.
கூட்டாளிகளுடன் சேர்ந்து, மணிப்பூரில் இருந்து காரில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தாம்பெட்டமைன் போதை பொருளை சென்னைக்கு கடத்தி வந்தார்.
கட்சி கரை வேட்டி கட்டி, சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, பயணி போல ராமநாதபுரத்திற்கு மெத்தாம்பெட்டமைனை கடத்த முயன்ற போது, என்.சி.பி., என்ற மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். அவரது கூட்டாளிகள் இருவரும் கைதாகினர்.
செய்யது இப்ராஹிமின் மொபைல் போன் தொடர்புகள் குறித்து, என்.சி.பி., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர் இதற்கு முன், ராமநாதபுரத்தில் இருந்து வாடகை படகில், இலங்கைக்கு போதை பொருள் கடத்தியது தெரியவந்தது.
இலங்கைக்கு கடத்திய பின், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளியை தொடர்பு கொண்டுள்ளார்.
மேலும் இப்ராஹிம் கூட்டாளிகள் சிலர், சென்னை செங்குன்றத்தில் ரகசிய கிடங்கு நடத்தி போதை பொருள் பதுக்கி இருப்பதும், அது தொடர்பாக அடிக்கடி செய்யது இப்ராஹிமை தொடர்பு கொண்டதும் தெரியவந்து உள்ளது.
அதேபோல, ராமநாதபுரம் பகுதியில் மீன்பிடி படகுகளை வாடகைக்கு விடும் நபர்கள் போல, செய்யது இப்ராஹிம் கூட்டாளிகள் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. அவர்களை என்.சி.பி., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'செய்யது இப்ராஹிம் பின்னணியில், அவரது கூட்டாளிகள் மட்டுமின்றி, பெண் ஒருவரும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அவரையும் தேடி வருகிறோம்' என்றனர்.

