ADDED : ஏப் 27, 2024 12:46 AM
சென்னை:உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் திரவ நைட்ரஜன், உணவு பொருட்களை பொட்டலமிடுவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில், திரவ நைட்ரஜன் கலந்த, 'ஸ்மோக் பிஸ்கட்' சாப்பிட்ட சிறுவன், வயிற்று வலியால் துடித்த வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தமிழகத்தில் திரவ நைட்ஜன் கலந்த உணவை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், பால், தயிர், பழச்சாறுகள் உள்ளிட்ட உணவு பொருட்களை பொட்டலமிடுவதற்கு மட்டுமே, நைட்ரஜன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பி.சதீஷ்குமார் கூறியதாவது:
உணவு பொருட்களில் நுரைக்கும் காரணியாகவும், பொட்டலமிடும் வாயுவாகவும், உந்து சக்தியாகவும் திரவ நைட்ரஜன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமைத்த உணவு மற்றும் இதர உணவு பொருட்களிலும், திரவ நைட்ரஜன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.
திரவ நைட்ரஜன் கலக்கும் போது ஏற்படும் குளிர்ந்த ஆவியை, தவறுதலாக சுவாசிக்கும் பட்சத்தில், மூச்சுத் திணறல், வயிற்று பகுதியில் அழுத்தம் அதிகரித்து, மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, உணவு பொருட்களை பதப்படுத்தி பொட்டலமிட, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றவர்களை தவிர, வேறு எந்த வணிகரும் நைட்ரஜனை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதியில்லை.
நைட்ரஜனை, திரவ, வாயு உள்ளிட்ட எந்த வடிவிலும் கலந்து, உணவு பொருட்களை தயாரித்து, சமைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திரவ நைட்ரஜன் பயன்படுத்த உரிமம் பெற்றவர்கள் விதியை மீறினால், 2,000 முதல் 10,000 ரூபாய் அபராதம்; குற்றம் உறுதி செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்பட்டு, 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
உரிமம் பெறாதவர்களுக்கு, இந்த விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சம்பந்தப்பட்ட வணிகரிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

