கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு இல்லை: தி.மு.க., எம்.எல்.ஏக்கள் விளக்கம்
கள்ளச்சாராய விற்பனையில் தொடர்பு இல்லை: தி.மு.க., எம்.எல்.ஏக்கள் விளக்கம்
ADDED : ஜூன் 22, 2024 12:04 PM

சென்னை: கள்ளச்சாராயம் விற்பனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தி.மு.க., எம்.எல்.ஏக்கள் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
கள்ளச்சாராயம் மரணங்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் காரணம் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன் ( ரிஷிவந்தியம்), உதய சூரியன் (சங்கராபுரம்) உள்ளிட்டோர் கூட்டாக நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தோல்வியின் விரக்தியால் பேசி வருகிறார் ராமதாஸ். அவர் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார். குற்றச்சாட்டை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்து விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி அரசியலில் இருந்து விலகத் தயாரா?.
வீண் குற்றச்சாட்டு
கள்ளச்சாராயம் விவகாரத்தில் அதிகாரிகளை கூண்டோடு முதல்வர் ஸ்டாலின் மாற்றி உள்ளார். இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட ராமதாஸ் முயற்சி செய்கிறார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களின் உடனடி சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்தோம். அரசியல் ஆதாயத்திற்காக எங்கள் மீது வீண் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள்.
அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளோம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்குள்ளான 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்பட்டமான பொய்
இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இல்லாத குற்றச்சாட்டை தெரிவித்து சட்டசபையை முடக்க இ.பி.எஸ்., முயற்சி செய்கிறார். கள்ளச்சாராயத்தை அனுமதிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. பேச வாய்ப்பு தரவில்லை என பழனிசாமி கூறுவது அப்பட்டமான பொய். மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்ததால் அதிமுகவினர் சட்சபையில் அமளியில் ஈடுபடுகின்றனர். அமளியில் ஈடுபட்டாலும் அவையில் தொடர்ந்து பங்கேற்க அதிமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
சி.பி.ஐ., விசாரணை எதற்கு?
சிபிசிஐடி, ஒரு நபர் குழு விசாரணையை உடனடியாக துவங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் புறக்கணித்ததால் அரசியல் செய்ய வாய்ப்பு கிடைக்குமா என காத்திருக்கின்றனர். சி.பி.ஐ., விசாரணை எதற்கு?. அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாரய உயிரிழப்பை சிபிஐ விசாரித்ததா?. திமுக அரசு வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவைப்படவில்லை. கள்ளுக்கடை திறக்கும் அவசியம் தற்போது எழவில்லை. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.