ADDED : மார் 30, 2024 01:15 AM
கோவை:விடுதி கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் விடுதி உரிமையாளர்கள் மற்றும் தங்கி இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் அனந்தராமன் கூறியதாவது:
கோவையில் 500க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் வெளியூரில் இருந்து வந்து வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் பெண்கள் அதிகமான பேர் தங்கி உள்ளனர்.
விடுதி உரிமையாளர்கள் விடுதி கட்டணத்துடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். ஓட்டல், லாட்ஜ் மற்றும் உணவு விடுதிகளுக்கு, விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., தனியார் தங்கும் விடுதிகளுக்கு பொருந்தாது என, அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இது குறித்து விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதி அறைகள், குடியிருப்புக்கான பிரிவில் வருவதால் விடுதி கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

