ADDED : ஜூலை 12, 2024 02:36 AM
சென்னை:உச்ச நீதிமன்ற நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் நேற்று கூடி மணிப்பூரை சேர்ந்த நீதிபதி கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.
கோட்டீஸ்வர் சிங், 2011 அக்டோபரில், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மணிப்பூரில் உயர் நீதிமன்றம் அமைந்த பின், அந்த மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஜம்மு - காஷ்மீர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை நியமிப்பதால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்ததாக இருக்கும். மணிப்பூர் மாநிலத்தில் இருந்து, உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் முதல் நீதிபதியாகவும் இருப்பார்.
நீதிபதி ஆர்.மகாதேவன், நீதித்துறை பணிகளில் பரிச்சயமானவர்; மூத்த நீதிபதி; பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில், மூன்றாவது இடத்தில் உள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, இவர் தகுதியானவர் என கொலிஜியம் கருதி பரிந்துரைத்துள்ளது.

