ADDED : மார் 30, 2024 01:23 AM

ஈரோடு:''தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல; தமிழகம் காக்கும் வியூகம்,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார்.
ஈரோடு லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
வீரப்பன்சத்திரத்தில் அவர் பேசியதாவது:
நாடு காக்க கட்சி வரைகோடுகளை அழித்து விட்டு, மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் இங்கு வந்துள்ளனர். எல்லா கட்சி வேறுபாடுகளையும் மறந்து, லோக்சபாவில் உங்கள் குரல் ஒலிக்க நான் வந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழகம் காக்கும் வியூகம்.
வெளி மாநிலங்களில் இருந்து பலர் வேலைக்கு வருகின்றனர் என்கின்றனர். அதன் அர்த்தம் என்னவென்றால், அங்கு வேலை இல்லை.
நாம் கொடுக்கும் வரியில் ஒரு ரூபாய் கொடுத்தால், 29 காசு தான் நமக்கு திரும்ப வருகிறது. ஆனால் இங்கு வேலை தேடி வரும் தொழிலாளர்களின் ஊரில், ஒரு ரூபாய் கொடுத்தால் ஏழு ரூபாய் கிடைக்கிறது. அங்கிருந்து தான் இங்கு கூலி வேலைக்கு வருகின்றனர். பிரதமர் தமிழகம் வரும்போது, மழலை தமிழில் இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளைப் பேசுவார். தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிட கூட்டம் இது என்று அங்கே பேசிக்கொள்கிறார்கள்.
வட நாட்டில் கட்டபொம்மன், வ.உ.சி., காமராஜர் என்று யாராவது பெயர் வைத்து இருக்கின்றனரா... ஆனால் நம் மாநிலத்தில் காந்தி, நேரு, போஸ், படேல் என பலருக்கும் பெயர் வைத்துள்ளோம். நீங்கள் இப்போது தான் படேலுக்கு சிலை எழுப்பினீர்கள். நாங்கள் எங்கள் இதயத்தில் எப்போதே படேலுக்கு சிலை எழுப்பி விட்டோம்.
தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது பொய். எங்கள் பெயரைக் கேட்டாலே அது தெரியும். இங்குள்ள ஒரு அமைச்சர் பெயர் நேரு. அரசியலும் மதமும் கலந்தால் நாடு உருப்படாமல் போய்விடும் என்பதற்கு ஐரோப்பா கண்டம் பெரிய உதாரணம்.
காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத்திட்டங்களை என் சகோதரர் செயல்படுத்துகிறார். இந்த திட்டத்தை ஏன் வடநாட்டில் செய்யவில்லை. 29 பைசாவை வைத்து நாங்கள் இதை செய்யும் போது, 7 ரூபாய் வைத்து ஏன் பீஹாரில் செய்ய முடியவில்லை.
கவர்னரை அனுப்பி இந்த ஆட்சியில் கை வைக்கின்றனர். ஹிந்தி திணிப்பு செய்கின்றனர். 29 காசு மட்டும் தந்து, நம் அடிவயிற்றில் கை வைக்கின்றனர். நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும். இவ்வாறு கமல் பேசினார்.

