ADDED : ஆக 30, 2024 10:39 PM
மதுரை:'தமிழக அரசு அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என, உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புத்தாநத்தம் காஜா முகைதீன் என்பவர், ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
சட்டத்தை நிலைநாட்ட நீதிபதிகள் உறுதிமொழி எடுப்பது போல, தமிழக அரசு அதிகாரிகள், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என, உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றி அதிகாரிகள் ஒருபோதும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை.
எதிர்காலத்தில் அதிகாரிகளின் இதுபோன்ற செயல் மன்னிக்கப்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு வரவழைத்து, இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.