தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்க அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 29, 2024 08:57 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளிகளில் பாதுகாப்பு குழுக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளிகளில் பாதுகாப்பு தரநிலைகளை உறுதி செய்ய குழுக்கள் அமைத்து, ஆய்வு மேற்கொள்வதற்கான கலந்தாய்வு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள, அரசு சுற்றுலா மாளிகையில் நடந்தது.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஐ.ஜி., பவானீஸ்வரி, சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார்.
கூட்டம் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனியார் பள்ளியில் நடந்த முகாமில், மாணவியர் சிலர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோரின் நலன் மற்றும் மறுவாழ்வை உறுதி செய்யவும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுத்து, உரிய பரிந்துரைகள் அளிக்க, பல்நோக்கு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் பள்ளிகளில், அரசு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைப்பது மற்றும் பாதுகாப்பு தர நிலைகளை உறுதி செய்ய, குழுக்கள் அமைப்பது குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள், பள்ளி கல்வித்துறை, மனநல மருத்துவத்துறை மற்றும் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.