
ஏப்ரல் 13, 1930 :
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டைக்கு அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில், அருணாசலம் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1930ல் இதே நாளில் பிறந்தவர் கல்யாணசுந்தரம்.
பள்ளி படிப்பை மட்டுமே முடித்து, விவசாயி, மாட்டு வியாபாரி, உப்பள தொழிலாளி உள்ளிட்ட 17 வேலைகளை செய்தார். நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார்.
நாடக நடிகர்கள் சினிமா நடிகரான போது, படித்த பெண் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். சுயமரியாதை குணமும், கம்யூனிச சிந்தனையும் உள்ள இவர், உழைப்போர் நிலையை 'தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது, ஆனாலும் மக்கள் வயிறு காயுது' என்றார்.
'செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம்' என நம்பிக்கை ஊட்டினார். 'நல்ல பொழுதையெல்லாம் துாங்கி கழிப்பவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்' என சோம்பேறிகளை சாடினார்.
'கொக்கர கொக்கரக்கோ சேவலே, திருடாதே பாப்பா' உள்ளிட்ட அனைத்து பாடல்களிலும் தனி முத்திரை பதித்து, தன் 29வது வயதில், 1959, அக்டோபர் 8ல் மறைந்தார்.
'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம் இன்று!

