ADDED : ஏப் 21, 2024 11:56 PM

ஏப்ரல் 22, 1931
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் என்ற ஊரில், கிராமிய பாகவதர் வீராசாமி நாயுடு - தெய்வானை தம்பதியின் மகனாக, 1931ம் ஆண்டு, இதே நாளில் பிறந்தவர் ராஜகோபால்.
சிறு வயதிலேயே நாடக நடிகராக வேண்டும் என்ற ஆவலில், பாவைக்கூத்து, நையாண்டி மேளம் உள்ளிட்டவற்றை கற்றார். தன், 12வது வயதில் பள்ளத்துார் வைரம் அருணாச்சலம் செட்டியாரின், பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பின், 'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோரின் நாடகங்களில் நடித்தார்.
இவர், குலதெய்வம் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதனால், குலதெய்வம் என்ற பெயரிலேயே நாடக கம்பெனியை துவக்கி நாடகங்களை நடத்தினார். களத்துார் கண்ணம்மா, சித்தி, தங்கப்பதுமை, ஆராரோ ஆரிராரோ, எங்க சின்ன ராசா உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
சில படங்களை தயாரித்து, நஷ்டம் ஏற்பட்டதால், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். வில்லுப்பாட்டு கலையில், கடவுள் புராணங்களை பாடி, மீண்டும் புகழ் பெற்றார். இவர் தன், 61வது வயதில், 1992, அக்டோபர் 30ல் மறைந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் மனைவியான, டி.ஏ.மதுரத்தால், 'சின்ன கலைவாணர்' என்ற பட்டம் பெற்றவரின் பிறந்த தினம் இன்று!
