சர்ச் விழாவில் நலம் விசாரித்த இந்நாள், முன்னாள் அமைச்சர்கள்
சர்ச் விழாவில் நலம் விசாரித்த இந்நாள், முன்னாள் அமைச்சர்கள்
ADDED : ஏப் 07, 2024 11:32 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் நடந்த சப்பர பவனியில் தி.மு.க.,அமைச்சர் பெரியசாமி, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என இருதரப்பினரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்த சர்ச்சில் பாஸ்கு திருவிழா நடந்தது. அதன் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனியில் பங்கேற்க தி.மு.க., அமைச்சரான பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., மா.கம்யூ.,வேட்பாளரான சச்சிதானந்தம் உள்ளிட்டரோடு வந்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன் தங்கள் கூட்டணி கட்சியின் எஸ்.டி.பி.ஐ., வேட்பாளரான முகமது முபாரக்குடன் வந்தனர்.
இருதரப்பினரும் ஒரே இடத்தில் சந்தித்தபோது முன்னாள் அமைச்சர் சீனிவாசன், தி.மு.க., அமைச்சர் பெரியசாமி,வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு கை கொடுத்து பரஸ்பரம் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருதரப்பினரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து சீனிவாசன் தன் இளைய மகன் சதீஷை,அமைச்சர் பெரியசாமிக்கு அறிமுகம் செய்தார். சதீஷ் அமைச்சரின் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். இதைதொடர்ந்து இரு தரப்பினரும் சப்பர பவனி நிகழ்ச்சியை துவக்கினர்.

