எந்த அடிப்படையில் ரேஷன் பருப்பு கொள்முதல்? அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
எந்த அடிப்படையில் ரேஷன் பருப்பு கொள்முதல்? அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 15, 2024 11:16 PM
சென்னை:மசூர் பருப்பை குறைந்த விலையில் மாநிலங்களுக்கு விற்பனை செய்ய உள்ளதால், அதை அந்தந்த மாநிலங்கள் பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்கலாம் என, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உணவு துறை கடிதம் எழுதியது.
தடை வேண்டும்
இந்நிலையில், 'பொது வினியோக திட்டத்துக்கான இ- - டெண்டரில், தமிழக அரசு மசூர் பருப்பை சேர்க்கவில்லை; கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்யும் டெண்டரை உறுதி செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஆறுமுகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனு விபரம்:
மசூர் பருப்பை போல, கேசரி பருப்பும் இருப்பதால், மசூர் பருப்பில் கலப்படம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, அந்த பருப்பை கொள்முதல் செய்யும் அறிவிப்பாணையை, தமிழக அரசு 2007ல் திரும்ப பெற்றது. பின், மசூர் பருப்பின் சத்துக்களை கருத்தில் கொண்டு, 2017ல் கொள்முதல் பட்டியலில் அந்தப் பருப்பை சேர்த்தது.
கடந்த பிப்., 14ல் அரசு வெளியிட்ட இ - -டெண்டர் அறிவிப்பில், மசூர் பருப்பு சேர்க்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இதற்கு முன் கேசரி, மசூர் பருப்பில் கலப்படம் செய்யப் பட்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்பை காட்டி, கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 1961ல் கேசரி பருப்பு தடை செய்யப்பட்டது. அதை மாநில அரசு கவனத் தில் கொள்ளவில்லை.
மேலும், 20,000 டன் கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்ய, மே 27ல் அரசு டெண்டர் கோரியது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, ஜூன் 13ல் கனடா மஞ்சள் பருப்பை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு, அரசு ஆர்டர் கொடுத்து உத்தரவிட்டது.
இந்த வகை பருப்பு விலை அதிகம். மசூர் பருப்பு விலை குறைவு. மசூர் பருப்பை கொள்முதல் செய்து, மக்களுக்கு சப்ளை செய்தால், மக்களின் பணம் சேமிப்பாகும். எனவே, கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்யும் டெண்டரை உறுதி செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.
மறுத்துள்ளது
இந்த மேல்முறையீட்டு மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆஜராகி, ''மசூர் பருப்பை கொள்முதல் செய்ய, மாநில அரசு மறுத்துள்ளது. மசூர் பருப்பில் கூடுதல் ஊட்டச்சத்து உள்ளது.
''ஆனால், அந்த பருப்பை கொள்முதல் செய்யாததற்கு உரிய காரணத்தை அரசு தெரிவிக்கவில்லை. விலை குறைந்த இந்த பருப்பை வாங்கினால், மாநில அரசுக்கு மாதத்துக்கு 150 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்,'' என்றார்.
இதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''தமிழக மக்கள் மசூர் பருப்பை விட, துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர். அதனால், விவசாயிகளிடம் இருந்து துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மசூர் பருப்பு கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அந்த பருப்பை மறுக்கவும் இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும்,'' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், எந்த அடிப்படையில் பொது வினியோக திட்டத்தில் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து, இரண்டு வாரங்களில் அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி, அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

