ADDED : மார் 13, 2025 12:13 AM

மதுரை: மதுரையில் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாக இருந்த 17 வயது சிறுவனை பெற்றோர் கண்டித்த நிலையில், வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 17 வயது மகன் பிளஸ் 1 படிப்பை முடித்து விட்டு, பள்ளிக்கு செல்லாமல் ஓராண்டாக வீட்டிலேயே இருந்தார். அலைபேசியில் பப்ஜி, ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்தார். பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் தொடர்ந்து விளையாடினார். வேலைக்காவது செல்லுமாறு பெற்றோர் கூறினர். '17 வயது என்பதால் என்னை யாரும் வேலைக்கு சேர்க்க மாட்டார்கள்' என்று கூறினார்.
நாளடைவில் விளையாட்டில் 'டாஸ்க்கை' முடிக்க முடியாமல் மனஅழுத்தத்திற்கு ஆளானார். நேற்றுமுன்தினம் மாடியில் இருந்த போது பக்கத்து வீட்டு சிறுவன் வந்தான். அவனிடம் 'என் அப்பா, அம்மாவை பார்த்துக்கொள்' என்றுகூறி அலைபேசியை கீழே போட்டு உடைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கீரைத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி தற்கொலை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா முருகனேரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அலைபேசியை தொடர்ந்து பார்த்து வந்தார். பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டி. கல்லுப்பட்டி எஸ்.ஐ வீரபத்திரன் விசாரித்து வருகிறார்.