ADDED : செப் 09, 2024 06:28 AM

சென்னை: 'திசைகளை வெல்வதற்கான முன்னறிவிப்பாக, அரசியல் கட்சியாக பதிவு என்ற முதல் கதவு திறந்திருக்கிறது. முதல் மாநில மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, தலைமை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. இதை தொடர்ந்து, கட்சி தொண்டர்களுக்கு, விஜய் எழுதியுள்ள கடிதம்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கோட்பாட்டோடு, அரசியலை அணுகுவது ஒருவித கொள்கை கொண்டாட்டம்தான்.
எனினும், முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், சட்டப்பூர்வமான பதிவுகளுக்காகவுமே காத்திருந்தோம்.
இப்போது, அதற்கான அனுமதி கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக, இந்தாண்டு பிப்ரவரியில், தலைமை தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்தோம்.
விண்ணப்பத்தை சட்டப்பூர்வமாக பரிசீலித்த தேர்தல் கமிஷன், தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாக தற்போது பதிவு செய்துள்ளது. தேர்தல் அரசியலில், பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்கு பெற அனுமதி வழங்கி உள்ளது.
இதை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி. திசைகளை வெல்வதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதல் கதவு திறந்திருக்கிறது.
கட்சியின் கொள்கை அறிவிப்பு, முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
தடைகளை தகர்த்தெறிந்து, கொடியை உயர்த்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழகத்தில் வலம் வருவோம். வெற்றிக்கொடி ஏந்தி மக்களை சந்திப்போம்; வாகை சூடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.வெ.க., மாநாட்டுக்கு அனுமதி
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வரும் 23ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அனுமதி கேட்டு, ஆக., 28ல் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில், மாநாடுக்கான இடம், பங்கேற்க உள்ள முக்கிய நபர்கள், எவ்வளவு பேர் வருவர் என்பது உள்ளிட்ட 21 கேள்விகளை எழுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி, விஜய் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
அதை பரிசீலனை செய்த நடிகர் விஜய் தரப்பு, கடந்த 6ல் பதில் கடிதம் அளித்தது. அதை ஏற்று, விக்கிரவாண்டி, வி.சாலையில் மாநாடு நடத்த, விழுப்புரம் மாவட்ட காவல் துறை தரப்பில், 33 நிபந்தனையுடன் நேற்று அனுமதி வழங்கியது. இதனால், திட்டமிட்டபடி விஜய் கட்சி மாநாடு நடக்கும் என தெரிகிறது.