மணல் குவாரிகள் திறப்பு ஈ.டி., வழக்கால் தள்ளிவைப்பு
மணல் குவாரிகள் திறப்பு ஈ.டி., வழக்கால் தள்ளிவைப்பு
ADDED : ஆக 17, 2024 12:14 AM
சென்னை:அ.தி.மு.க., ஆட்சியில் கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணலுக்கு மாற்றாக, 'எம் - சாண்ட்' எனப்படும், கல் மணல் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இதற்காக, 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, எம் - சாண்ட் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தி.மு.க., அரசு 2021ல் பொறுப்பேற்றதும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க அனுமதி வழங்கியது.
இதற்காக, காவிரி, கொள்ளிடம், கொசஸ்தலையாறு உள்ளிட்ட, 29 இடங்களில் குவாரிகளை திறக்க திட்டமிட்டு, முதற்கட்டமாக, 12 குவாரிகள் திறக்கப்பட்டன.
புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள், குவாரிகளில் மணல் அள்ளும் பணிகளை துவங்கினர்.
இந்நிலையில், 2023 செப்டம்பரில் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மணல் விற்பனை வாயிலாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சோதனையில், 12.8 கோடி ரூபாய் ரொக்கம், 56 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மணல் விற்பனை வாயிலாக, 4,730 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக, அமலாக்கத்துறை கண்டறிந்தது. ஆனால், 37 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே, மணல் விற்பனை செய்ததாக அரசுக்கு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வழக்கு தொடர்பாக, திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலுார், அரியலுார் மாவட்ட கலெக்டர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், புதிதாக, 20 இடங்களில் மணல் குவாரிகள் திறப்பதற்கான பணிகளில், நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வந்தனர்.
மழையால் ஆறுகளில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. ஜன., மாதம் புதிய குவாரிகளை திறக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால், அமலாக்கத்துறை வழக்கு முடிவுக்கு வரும் வரை, மணல் குவாரிகளை திறக்க வேண்டாம் என, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, அதற்கான பணிகளை நிறுத்தி வைக்கும்படி, நீர்வளம் மற்றும் கனிமவளத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

